புதுடில்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின், சகோதரர் மற்றும்அவரது மனைவிக்கு சொந்தமான, 400 கோடி ரூபாய் மதிப்பிலான ‘பினாமி’ சொத்துக்களை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சட்ட திருத்தம்
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் சகோதரர், ஆனந்த் குமார். இவர், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணை தலைவராக, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

இவருக்கும், இவரது மனைவி, விசிட்டேர் லதாவுக்கு சொந்தமான, நொய்டாவில் உள்ள, 400 கோடி ரூபாய் மதிப்பிலான, 7 ஏக்கர், ‘பினாமி’ நிலத்தை, வருமான வரித்துறையினர், பறிமுதல் செய்தனர்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, ‘பினாமி’ சொத்துக்கள் பரிமாற்ற தடை சட்டத்தில், 2016ல் சட்ட திருத்தம் மேற்கொண்டது. அதை தொடர்ந்து, இச்சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
முறைகேடு
‘பினாமி’ முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு, ஏழு ஆண்டுகள் கடுங் காவல் தண்டனையும், சொத்தின் மதிப்பில், 25 சதவீதம் அபராதமாக விதிக்கவும், வழி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.