டில்லியில் இயங்கும் தனியார் தொண்டு நிறுவன அமைப்பின் சார்பில், வருடாந்திர கல்வி நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், நாடு முழுவதும், 596 மாவட்டங்களில், 17 ஆயிரத்து, 730 கிராமங்களில் ஆய்வு நடத்தியுள்ளது. 3 – 6 வயது குழந்தைகள், 5.46 லட்சம் பேரிடம், வாசிப்பு திறன் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள், அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரியவந்திருப்பதாவது: தமிழகம், குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகியவற்றில், தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் வருகை, 85 சதவீதம் பதிவாகியுள்ளது. பீஹார், உ.பி., மேற்கு வங்கம், மணிப்பூர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 60 சதவீதத்துக்கு குறைவாகவே, மாணவர்கள் வருகை உள்ளது.
தமிழகத்தில், பெரும்பாலான பெண் குழந்தைகள், எட்டாம் வகுப்பு வரை, பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, 2014க்கு பின் உயரவில்லை. எல்.கே.ஜி., – யு.கே.ஜி.,யில், பெரும்பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்கின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு பாடம், தமிழில் வாசிக்க வழங்கப்பட்டுள்ளது. அதில், எட்டாம் வகுப்பில், 27 சதவீத மாணவர்கள், வாசிக்க தெரியாமல் இருந்துள்ளனர். ஒன்று முதல், 99 வரையான எண்கள் தெரியாமல், எட்டாம் வகுப்பில், 22 சதவீத மாணவர்கள் திணறியுள்ளனர்.