புதுடில்லி : முத்தலாக் மசோதா கடந்த வாரம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது இன்று (டிச.,27) லோக்சபாவில் விவாதம் நடைபெற உள்ளது.
முத்தலாக் அவசர சட்ட மசோதா ஏற்கனவே லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் எதிர்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து குறிப்பிட்ட சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இந்த மசோதா கடந்த 20ம் தேதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது முதல் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், மசோதா மீதான விவாதத்தில் பங்குபெற விரும்புவதாக காங்., எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியிருந்தார். அதன்படி இன்று (டிச.,27) அந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து பாஜ., எம்பிக்கள் அனைவரும் தவறாது பார்லி.,க்கு வரவேண்டும் என அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே அவசர சட்டத்தின் ஆயுள் 6 மாதம் என்பதும், பார்லி., கூட்டம் தொடங்கிய 42 நாளில் மசோதா நிறைவேறி விட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி இல்லாத பட்சத்தில் அவசர சட்டம் காலாவதியாகி விடும் என்பதும் விதி. எனவே இந்தச் சட்டத்தை நிறைவேற்ற பாஜ.,வும், அதில் மேலும் திருத்தங்கள் கொண்டு வர எதிர்கட்சிகளும் முயன்று வருவதால் பார்லி.,ல் இன்று அனல் பறக்கும் விவாதம் இருக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.