லண்டன்: தொழில் அதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு அனுமதி அளித்து, லண்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, ‘அப்பீல்’ செய்ய உள்ளதாக, அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
பல்வேறு வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக, தொழில் அதிபரான, விஜய் மல்லையா, 62, மீது, வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டன் நகருக்கு, மல்லையா தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தக் கோரி, பிரிட்டன் அரசுக்கு, மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இதையேற்ற லண்டன் நீதிமன்றம், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்தது. இதற்கான உத்தரவு, பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவிடம் ஒப்படைக்கும் உத்தரவை எதிர்த்து, லண்டன் உயர் நீதிமன்றத்தில் மல்லையா அப்பீல் செய்ய உள்ளதாக, அவரது
வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.