சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல்ஜெயராமன், 60, சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர் நெல் ஜெயராமன். 160 – க்கும் மேற்பட்ட அரியவகை நெல் விதைகளை சேகரித்தார். இ்ந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதியுற்று வந்தார். சென்னை தேனாம்பேட்டையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்த நிலையில் இன்று ( டிச. 6) காலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த, கட்டிமேடு கிராமத்தில், ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர், இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டுவந்தார். மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராக போராடி வந்தார்.பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றியமைக்காக மத்திய, மாநில அரசுகளின் விருது பெற்றார்.
