வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் ஜெப் செஷன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில், பிரதிநிதிகள் சபையில், எதிர்க்கட்சியான, ஜனநாயக கட்சி, பெரும்பான்மை பலம் பெரும் நிலையில் உள்ளது. அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி, செனட் சபையை தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெறவில்லை.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் தனது அமைச்சரவை மற்றும் அரசு நிர்வாக பொறுப்புகளில் மாற்றம் செய்ய போவதாக அறிவித்திருந்தார். அதன் முதல் பலிகடாவாக அந்நாட்டு அட்டர்னி ஜெரனல் எனப்படும் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெப் செஷன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் டெனால்டு டிரம்ப்பின் கோரிக்கை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.
ராஜினாமா பின்னணி
கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக, அந்நாட்டின் உளவுத்துறை குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரத்தில் ரஷ்ய உளவாளிகள், 12 பேர் மீது, அமெரிக்க நீதிமன்றத்தில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விஷயங்களில் ஜெப் செஷன்ஸ் செயல்பாடுகளால் டிரம்ப்புடன் மோதல் ஏற்பட்டதாலே ராஜினாமா முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
ராஜினாமா குறித்து டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியது, ஜெப் செஷன்ஸ் சேவைக்கு நன்றி அவர் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்றார்.