புதுடில்லி: புகார் அளிக்க, போலீஸ் ஸ்டேசன் வரும் பொது மக்களிடம் போலீசார் அமைதியாக பேச வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டில்லி போலீசாருக்கு ரோந்து வாகனங்கள் வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது: போலீசாரிடம் புகார் அளிக்க யாராவது வந்தால், அவர்களிடம் நம்மால் அமைதியாக பேச முடியாதா? நீண்ட நேரம் காத்திருந்தால், அவர்களுக்கு நம்மால் தண்ணீர் வழங்க முடியாதா? பொது மக்களுடன் நட்புறவை ஏற்படுத்த போலீசார் கவனம் செலுத்த வேண்டும்.
வாய்ப்பிருந்தால், போலீஸ் ஸ்டேசன்களில், புகார் அளிக்க வருபவர்களுக்கு வசதியாக தேநீர் கடைகள் ஏற்படுத்த போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவருக்கும் முன்மாதிரியாக போலீசார் ஏன் திகழக்கூடாது. போலீஸ் ஸ்டேசன்கள் மற்றும் போலீசார் குறித்து பொது மக்கள் அனுப்பும் கருத்துகள் கவலை அளிப்பவையாக உள்ளன. உதவிக்காக போலீஸ் ஸ்டேசன் வருபவர்களை நடத்தும் விதத்தை மாற்ற வேண்டும். அவர்களை கவுரவத்துடன் நடத்த வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
நிகழ்ச்சியில், டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் கலந்து கொண்டனர்.