சென்னை : தமிழக கடலோர மாவட்டங்களில், இன்று(நவ.,1) சில இடங்களில், 20 செ.மீ., வரை, மழை கொட்ட வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின், துணை இயக்குனர் ஜெனரல், பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக் கடலின் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலைநிலவுகிறது. அதே இடத்தில், வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும் நீடிக்கிறது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியின், கடலோர மாவட்டங்களில், இன்று வட கிழக்கு பருவ மழை துவங்கும்.
இன்று, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், மிதமான மழை பெய்யும். சென்னையில், இடைவெளி விட்டு, மிதமான மழை பெய்யும்; சில இடங்களில் கன மழையும் பெய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.ஆனால், சென்னை வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை அறிவிப்பில், தமிழகத்தின் பல இடங்களில், பரவலாக மழை பெய்யும் என்றும், சில இடங்களில், 20 செ.மீ., வரை, கன மழை கொட்ட வாய்ப்புள்ளது என்றும், ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘வட கிழக்கு பருவ மழை, இன்று துவங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது’ என, கூறப்பட்டுள்ளது.
தனியார் வானிலை அமைப்பினர் வெளியிட்ட கணிப்பில், ‘தமிழகத்தில், இன்று முதல், 3ம் தேதி வரை, பரவலாக கன மழை பெய்யும்’ என, கூறப்பட்டுள்ளது.