ராய்ப்பூர் : பண மோசடி வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்ற தொழிலதிபர் சோக்சியிடம், ஜெட்லி மகள் பணம் பெற்றார் என காங்., தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து ராகுல் நேற்று கூறியதாவது: பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற, தொழிலதிபர் மெஹுல் சோக்சியிடம் இருந்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் மகள் சோனாலி, பல கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஊடகங்கள் மிரட்டப்பட்டு உள்ளதால், இது குறித்து செய்தி வெளியிட தயங்குகின்றன. இவ்வாறு கூறினார்.
மகளை காப்பாற்றினார்:
செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜஸ்தான் மாநில காங்., தலைவர் சச்சின் பைலட் தெரிவிக்கையில், ‘நிரவ் மோடி நிறுவனத்திற்கு சட்ட ஆலோசகர்களாக இருந்த தனது மகளையும், மருமகனையும் கடன் மோசடி வழக்கு விசாரணையிலிருந்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காப்பாற்றியுள்ளார்; தனது பதவியை தவறாக பயன்படுத்திய ஜெட்லியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ எனக் கூறினார்.