ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக்கோரிய தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்டத் தலைவர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய பரிந்துரைக்கவேண்டும் என்று நிறைவேற்றப்பட்தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம். பின்னர், அந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பட்டது. அந்தத் தீர்மானத்தை ஆளுநர் உடனடியாக பரிந்துரைத்து, ஏழு பேரையும் விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்கவேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுதொடர்பான எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் ஆளுநர் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான டி.டி.வி.தினகரன் ட்விட்டர் பதிவில், ‘எட்டு கோடி தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நொடிப் பொழுதும் தாமதிக்காமல் உடனடியாக தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கி, 27 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். பேரறிவாளன் உள்பட ஏழு தமிழர்களின் விடுதலையில் மேலும் தாமதம் ஏற்படாமல் இருக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தாமதமின்றி ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அமைச்சரவை பரிந்துரை குறித்து மத்திய அரசிடம் ஆளுநர் கருத்து கேட்கத் தேவையில்லை. கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவித்து தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய வரலாற்று வாய்ப்பு தமிழக ஆளுநருக்குக் கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி விரைந்து நல்லதொரு முடிவை எடுக்குமாறு ஆளுநரை வேண்டிக் கேட்டுகொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பழ.நெடுமாறன் அறிக்கையில், ‘தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை கால தாமதம் செய்யாமல் உடனடியாக ஏற்று அவர்களை விடுதலை செய்ய முன் வருமாறு ஆளநரை வேண்டிக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.