கொள்ளிடம் அருகே வெள்ளம் சூழ்ந்துள்ள கரையோர கிராமங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி. விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் முதலைமேடு திட்டு கிராமத்திலிருந்து கொள்ளிடம் நோக்கி கார்களில் சென்று கொண்டிருந்தனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரில், முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி, கூட்டுறவு வங்கி தலைவர் தங்க.கதிரவன் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது தண்டேசநல்லூர் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது.
அதனை பார்த்த பைலட் வாகனத்தில் சென்ற அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் மெதுவாக செல்லுமாறு சைகை காட்டியும், டிராக்டர் நேராக அமைச்சர் சென்ற கார் மீது மோதியது. இதில் அமைச்சர் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் அமைச்சர் காயமின்றி உயிர் தப்பினார். பாதுகாப்பு அதிகாரிகள் டிராக்டருடன் ஆச்சாள்புரத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுனர் சிவராஜை கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் கொள்ளிடம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.